இயேசுசபைக் கருத்தரங்கு : அகதிகள், புலம்
பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டும்
மார்ச் 31,2011. சட்டப்படி அங்கீகாரம் பெற்றவர், பெறாதவர் என்று எந்த நிலையில் இருந்தாலும்,
அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டுமென்று இயேசுசபையினர் நடத்திய
ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது. இயேசுசபையினரின் அகதிகள் பணிக் குழுவினர் இச்செவ்வாயன்று
Brusselsல் நடத்திய ஒரு கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் அகதிகளுக்கு
சரியான பாதுகாப்பு இல்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில்
அண்மையில் ஏற்பட்டுள்ள பல புரட்சிகளின் எதிரொலியாக ஐரோப்பாவிற்கு வந்து சேரும் அகதிகளின்
எண்ணிக்கை அதிகரித்து வருவது, சிறப்பாக, தற்போது இத்தாலியின் Lampedusaவில் உருவாகியிருக்கும்
அகதிகள் நிலை இக்கூட்டத்தில் பேசப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் வருவது ஐரோப்பிய
ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை என்றும், இதற்குத் தகுந்த
தீர்வுகள் காண்பது இந்த ஒன்றியத்தின் கடமை என்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட பலரும்
கருத்து தெரிவித்தனர்.இயேசுசபையினர் நடத்தும் அகதிகள் பணி தற்போது உலகின் 50 நாடுகளில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஐரோப்பிய நாடுகளில் 12 இடங்களில் இப்பணிகளுக்கான அலுவலகங்கள்
உள்ளதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.