மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள் 2020ம் ஆண்டுக்குள் தங்கள் வறுமையை விட்டு
வெளியேற முடியும் - ஐ.நா. அறிக்கை
மார்ச் 30,2011. சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், உலகில் இன்று மிகவும் பின்தங்கிய
நிலையில் உள்ள 48 நாடுகளில் பாதி நாடுகளாவது 2020ம் ஆண்டுக்குள் தங்கள் வறுமையை விட்டு
வெளியேற முடியும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது. மிகவும் பின் தங்கிய நாடுகள்
குறித்த அகில உலக கருத்தரங்கு வருகிற மே மாதம் இஸ்தான்புல்லில் நடக்க விருப்பதையொட்டி,
இச்செவ்வாயன்று ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐ.நா. வகுத்துள்ள
மில்லேன்னிய வளர்ச்சி திட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் தகுந்த வரி விலக்கு,
வேளாண்மைப் புரட்சி மற்றும் சரியான கல்வித் திட்டங்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் வறிய
நாடுகளுடன் செயல்பட்டால், மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளில் 50 விழுக்காடு நாடுகளாகிலும்
வறுமையை விட்டு வெளியேற முடியும் என்று இவ்வறிக்கை கூறுகிறது. 1970ம் ஆண்டில் உலகில்
51 நாடுகளை மிகவும் பின் தங்கிய நாடுகளென ஐ.நா. அறிவித்தது. இவற்றில் கடந்த 40 ஆண்டுகளில்
Botswana, Cape Verde மற்றும் Maldives ஆகிய மூன்று நாடுகளே வறுமையை விட்டு வெளியேறியுள்ளன. உலகின்
அனைத்து நாடுகளும் ஒரு உலகக் குடும்பமாக உழைத்தால் மட்டுமே இன்று மிகவும் பின் தங்கிய
48 நாடுகளை வறுமையிலிருந்து விடுவிக்க முடியும் என்று ஐ.நா. அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.