திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்தார் சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும்
தலைவர்.
மார்ச் 28, 2011. சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம்
கிறிஸோஸ்டொமோஸ் இத்திங்களன்று தன் குழுவினருடன் வந்து திருப்பீடத்தில் திருத்தந்தையைச்
சந்தித்து உரையாடினார். 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந்தேதி சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ்
கிறிஸ்தவசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஏற்கனவே 2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில்
வத்திக்கானிலும், கடந்த ஆண்டின் திருத்தந்தையின் சைப்ரசுக்கான திருப்பயணத்தின்போது அங்கும்
திருத்தந்தையைச் சந்தித்து உரையாடியுள்ளார். இத்திங்களன்று திருப்பீடத்தில் இடம்பெற்ற
இந்த மூன்றாம் சந்திப்பினைத் தொடர்ந்து திருத்தந்தையின் அழைப்பின் பேரில் திருப்பீடத்தில்
அவருடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம்
கிறிஸோஸ்டொமோஸ். இதே திங்களன்று, தங்கள் அட்லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள
இந்தியாவின் சீரோ மலபார் ஆயர்களுள் ஏழு பேரையும் சந்தித்து உரையாடினார் பாப்பிறை.