ஜப்பானில் துன்பப்படும் மக்களுக்கென இந்தியாவில் திருவிழிப்பு வழிபாடுகள்
மார்ச் 24,2011. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுக்கதிர் வீச்சு ஆகியவைகளால்
உயிரிழப்பையும் இன்னும் பிற துன்பங்களையும் சந்தித்துள்ள அம்மக்களுக்கென இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில் இப்புதனன்று திருவிழிப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உயிரிழந்தோருக்கான
மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. புது டில்லி, ஆஜ்மீர், பெங்களூரு ஆகிய நகரங்கள் உட்பட
பல்வேறு பகுதிகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ குழுக்கள் இணைந்து மெழுகுதிரிகளை ஏந்தி
இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர். பெங்களூருவில் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்ட
கண்விழிப்பு வழிபாட்டில் பெங்களூரு உயர்மறைமாவட்டப் பேராயர் பெர்னார்ட் மோராஸ் கலந்து
கொண்டு மெழுகுதிரியை ஏற்றி வைத்து, ஜப்பான் மக்களுக்கு உதவும் நோக்குடன் சிறு காணிக்கையாக
இலட்சம் ரூபாயும் அளித்தார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறு சமுதாய ஆர்வலர்
குழுக்கள் அணுசக்தி நிலையங்கள் குறித்து இந்தியாவும் நல்ல முடிவுகள் எடுக்க வேண்டுமென்ற
வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகளைத் தாங்கி நின்றிருந்தனர். புது டில்லியில் நடைபெற்ற
இவ்வழிபாட்டில் பெரியதொரு துணியில் பல்லாயிரம் மக்கள் கையெழுத்திட்டு, டில்லியில் உள்ள
ஜப்பான் தூதரகத்து அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.