குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அயர்லாந்து
கர்தினாலின் வழிகாட்டுதல் ஏடு.
மார்ச் 21, 2011. குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவும் நோக்கில் வழிகாட்டுதல்கள் அடங்கிய சிறு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அயர்லாந்து பேராயர் கர்தினால் Sean Brady. கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருத்தந்தை வெளியிட்ட
மேய்ப்புப் பணி சுற்றறிக்கையின் முக்கிய கருத்துக்களைத் தன் சுற்றறிக்கையில் கோடிட்டுக்
காட்டியுள்ள கர்தினால், அமைதி மற்றும் குணப்படுத்தலின் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும்
நாம், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மற்றும் புதுப்பித்தலுக்கான தலத்திருச்சபையின் அர்ப்பணம்
ஆகியவை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார். 'குணப்படுத்தல்
மற்றும் புதுப்பித்தலை நோக்கி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இம்மேய்ப்புப்பணி சுற்றறிக்கை,
பாதிக்கப்பட்டவர்களுக்கான செபம், அவர்களுக்கு அக்கறையுடன் செவிமடுத்தல், ஆன்மீக முறையிலான
ஆதரவு, திருச்சபைக்குள் குழந்தைகளுக்கான பாதுகாப்பானச் சூழலை உருவாக்குதல், குழந்தைகளின்
பாதுகாப்பிற்கான தேசிய அவையின் உதவியுடன் மறைமாவட்டங்கள், துறவு இல்லங்கள் மற்றும் சமூகங்களில்
ஆய்வு செய்தல் போன்றவைகளைப் பரிந்துரைத்துள்ளது.