தியான மறையுரையாளருக்குத் திருத்தந்தை நன்றி க் கடிதம்
மார்ச்19,2011. வருகிற மே ஒன்றாந்தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கின்ற
இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் சாட்சிய வாழ்வால் தூண்டப்பட்ட ஆன்மீகப் பயணத்
தியானங்களுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இச்சனிக்கிழமை
காலை ஆண்டுத் தியானத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இத்தியான காலச் சிந்தனைகளை வழங்கிய
கார்மேல் சபை அருட்தந்தை François-Marie Lethel க்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில்
இவ்வாறு கூறியுள்ளார். திருப்பீட இறையியல் கழகச் செயலரான அருட்தந்தை François-Marie
Lethel, புனிதர்கள், திருச்சபைத் தந்தையர்கள், இறையியல் வல்லுனர்கள், தியானயோகிகள் எனத்
திருச்சபையில் புனித வாழ்வு வாழ்ந்தவர்களை மேற்கோள் காட்டி விளக்கிய விதம் பாராட்டுக்குரியது
என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்து என்னும் ஒளிமிகுந்த சூரியனைச் சுற்றியே
இவர்கள் அனைவரின் புனித வாழ்வு இருந்தது எனவும் திருத்தூதர்கள் தொடங்கி மத்திய கால எழுத்தாளர்கள்,
இறையியல் வல்லுனர்கள், தியானயோகிகள், திருச்சபைத் தந்தையர்கள் என இவர்களைப் பற்றியே புதன்
மறைபோதகங்களில் தான் வழங்கி வருவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.