துன்பப்படும் ஜப்பான் மக்களுக்கு உலகளாவிய ஆயர்களின் செபங்கள், ஒருமைப்பாட்டுணர்வு
மார்ச்18,2011. ஜப்பானில் இம்மாதம் 11ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், சுனாமி மற்றும்
அணுஉலைகள் வெடிப்பால் இடம் பெறும் அணுக்கதிர்வீச்சுக்களால் பெரிதும் துன்பப்படும் அந்நாட்டு
மக்களுக்கு உலகளாவிய அளவில் கத்தோலிக்க ஆயர்கள் தங்களது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும்
தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான நியுயார்க் பேராயர்
Timothy M. Dolan, ஜப்பானின் ஒசாகா பேராயர் Leo Jun Ikenaga வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
அமெரிக்கத் திருச்சபையின் செபங்களையும் தோழமையுணர்வையும் தெரிவித்துள்ளார். மேலும்,
இந்தப் பேரிடர் ஏற்பட்டு இவ்வெள்ளிக்கிழமையோடு ஒருவாரம் நிறைவடைவதால் ஜப்பான் மக்களும்
நிவாரணப் பணியாளர்களும் மௌன அஞ்சலியும் செலுத்தினர். ஜப்பான் காவல்துறையின் கணிப்புப்படி,
இதுவரை 6,405 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 10,200 பேர் காணமாற்போயுள்ளனர்.