தடைசெய்து வைத்திருந்த 35,000 விவிலியப் பிரதிகளை வெளியிட மலேசிய அரசு அனுமதி
மார்ச் 17,2011. தடைசெய்து வைத்திருந்த 35,000 விவிலியப் பிரதிகளை வெளியிட மலேசிய அரசு
இச்செவ்வாயன்று அனுமதி வழங்கியுள்ளது. கடவுளை 'அல்லா' என்ற சொல்லால் அழைக்கக் கூடாதென்று
எழுந்த ஒரு வாதத்தினால், அச்சொல் பயன்படுத்தப்பட்டிருந்த விவிலியப் பிரதிகளை அரசு தடை
செய்திருந்தது. இத்தடையை நீக்கி, அப்பிரதிகளை வெளியிட அரசு அனுமதி வழங்கியதை கிறிஸ்தவர்கள்
வரவேற்றுள்ளனர். இருந்தாலும், அரசு எடுத்த முடிவில் வேறொரு பிரச்சனையும் எழுந்துள்ளதை
கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அரசு அனுமதி அளித்த இந்த 35,000 பிரதிகளில்
'கிறிஸ்தவர்களின் பயன்பாட்டுக்கு மட்டும்' என்று அச்சிடப்பட்டு, ஒவ்வொரு பிரதிக்கும்
ஒரு எண் குறிக்கப்பட்டுள்ளது என்றும், அப்பிரதியின் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்தும்
ஒரு முயற்சியே அதற்குத் தரப்பட்டுள்ள எண் என்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அரசின்
இந்த செயல்பாடுகள் விவிலியத்தை அவமானப்படுத்தும் ஒரு முயற்சியென்று கிறிஸ்தவர்கள் கூறிவருவதாக
UCAN செய்தியொன்று கூறுகிறது.