பாதுகாப்பு மற்றும் அமைதிக்கென மங்களூர் கிறிஸ்தவர்கள் 21 நாள் ஜெபம் மற்றும் உண்ணா நோன்பு.
மார்ச் 14, 2011. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு
சாட்சியாக இருந்த இந்தியாவின் மங்களூர் கிறிஸ்தவ சமூகத்தினர், பாதுகாப்பு மற்றும் அமைதிக்கென
21 நாள் செபம் மற்றும் உண்ணா நோன்பைத் துவக்கியுள்ளனர். இந்த மூன்று வார செபத்தைத்
துவக்கி வைத்து உரையாற்றிய மங்களூர் ஆயர் பால் டி சூசா, 2008ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில்
கிறிஸ்தவக் கோவில்கள் பரவலாகத் தாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்களிடையே பாதுகாப்பு
குறித்த அச்சம் நிலவி வருவதாகத் தெரிவித்தார். இந்நாட்களில் மங்களூர் கிறிஸ்தவர்கள்
பெரும்பான்மையினர் மாமிசவகை உணவையும் தங்களுக்குப் பிடித்தமான ஏனைய உணவு வகைகளையும் கைவிடுவதோடு,
அமைதிக்கான சிறப்புச் செபவழிபாடுகளிலும் கலந்துகொள்வர் என்று இந்த மூன்று வார செப மற்றும்
உண்ணா நோன்பிற்கு ஏற்பாடு செய்தோர் அறிவித்துள்ளனர். கர்நாடகாவில் 2008ல் பி.ஜே.பி.
கட்சி ஆட்சிக்குக்கு வந்த மூன்று மாதங்களிலேயே துவங்கிய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலில்
27 கிறிஸ்தவ இடங்கள் சேதமாக்கப்பட்டன.