2011-03-14 15:36:26

திருத்தந்தையின் அண்மை புத்தகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்.


மார்ச் 14, 2011. இயேசு எனும் நபரை இவ்வுலகம் மீண்டும் கண்டுகொள்ள உதவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாக திருத்தந்தையின் நாசரேத்தூர் இயேசு என்ற புத்தகம் உள்ளது என்றார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் குரு. ஃபெதரிக்கோ லொம்பார்தி.
'நாசரேத்தூர் இயேசு பாகம் இரண்டு : புனித வாரம்-எருசலேமில் நுழைந்தது முதல் உயிர்ப்பு வரை' என்ற தலைப்பில் கடந்த வியாழனன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புத்தகம் குறித்து 'ஓக்தாவா தியேஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இயேசு சபை குரு லொம்பார்தி, இந்நூல் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது ஏனெனில் இது நற்செய்தி விளக்கத்திற்கான புதிய ஒரு சகாப்தத்தைத் துவக்கியுள்ளது என்றார்.
அகில உலகத் திருச்சபையின் மேய்ப்பரும் சிறந்த கல்விமானும் ஆகிய திருத்தந்தை, கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் பாரம்பரியங்களுக்கு இயைந்த வகையில் கிறிஸ்தவர்களை இப்புத்தகத்தின் மூலம் ஓர் ஆழமான, திறமை வாய்ந்த வாசிப்பை நோக்கி வழிநடத்திச் செல்கிறார் என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
அண்மையில் வெளிவந்த திருத்தந்தையின் இந்தப் புத்தகம், கருத்துப் பரிமாற்றத்திற்கென உருவாக்கப்பட்ட ஒன்று என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.