மலாய் மொழியில் முப்பதாயிரம் விவிலியங்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு அரசு தடை, கிறிஸ்தவர்கள்
எதிர்ப்பு
மார்ச்12,2011: முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவில், மலாய் மொழியில் பல்லாயிரக்கணக்கான
விவிலியங்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு அரசு தடை செய்து வருதையொட்டி அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்
தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மலேசியாவில் முப்பதாயிரம் விவிலியங்கள்
விநியோகிக்கப்படுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து வருவது சமய சுதந்திரத்திற்கு முரணாக
இருக்கின்றது என்று இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு
கூறியது. அரசின் இந்நடவடிக்கை குறித்துப் பேசிய இக்கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Ng Moon
Hing, Borneo தீவின் துறைமுகத்தில் மலாய் மொழியில் முப்பதாயிரம் விவிலியங்கள் அதிகாரிகள்
வசம் இருக்கின்றன என்றார். மலாய் மொழி விவிலியத்தில் கடவுள் என்ற சொல்லுக்கு அல்லா
என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மலேசியாவின்
சுமார் 2 கோடியே 80 இலட்சம் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மலாய் முஸ்லீம்கள்.
25 விழுக்காட்டினர் சீனர்கள். 8 விழுக்காட்டினர் இந்தியாவைப் பூர்வீகமாக்க கொண்டவர்கள்.