திருத்தந்தை : ஏழைகளுக்கு உதவம் போது நிறைவாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கச்
செய்கின்றது
மார்ச் 11,2011. தேவையில் இருப்போருக்கு உதவி செய்யும் போது அது நம்மைக் கடவுளுக்கு மிக
நெருக்கமாக இட்டுச் செல்கின்றது மற்றும் அவரது அன்பிலிருந்து கிடைக்கும் நிறைவாழ்வின்
மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். புனித
பேதுருவின் வழிவரும் திருத்தந்தையருக்கு உதவும் “Pro Petri Sede” என்ற பெல்ஜிய நாட்டுப்
பிறரன்பு அமைப்பின் 45 பேரை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை,
வறியவர்க்கு உதவி செய்யும் போது அது நம்மில் மனமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என்றும்
கூறினார். நாம் தொடங்கியிருக்கும் இத்தவக்காலம், ஏழைகளுக்கு உதவி செய்வதற்கான நமது பொறுப்புணர்வை
அதிகமாக உணரச் செய்கின்றது என்றுரைத்தத் திருத்தந்தை, உலகில் அண்மைக் காலங்களில் கடுமையாய்ப்
பாதிக்கப்பட்ட, சிறப்பாக ஹெய்ட்டியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த
“Pro Petri Sede” அமைப்பினர் செய்த அனைத்து உதவிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.