இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க நாட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் –
ஐ.நா.அறிக்கை
மார்ச் 11,2011. நிலநடுக்கம், வறட்சி, புயல் ஆகிய பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கும்
வழிகளை ஒவ்வொரு நாடும் ஆராய வேண்டுமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. ஒவ்வொரு நாடும்
பேரிடர்களைச் சந்திக்க தங்கள் நாடு எவ்வகையில் தயாராய் உள்ளதென்ற கணிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றும்,
இக்கணிப்பு தரமும் தகுதியும் வாய்ந்த அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஐ.நா.வின்
பேரிடர் ஆபத்து குறைப்பு குழுவின் நிர்வாகச் செயலர் Margareta Wahlstrom இவ்வியாழனன்று
கூறினார். ஒவ்வொரு நாட்டிலும் இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் சக்தி இருந்தாலும்
அவற்றை ஒருங்கிணைப்பதில் தடைகளும் தாமதங்களும் இருப்பதாலேயே இவ்விடர்களில் பெரும் இழப்பையும்,
அழிவையும் சந்திக்க வேண்டியுள்ளதென Wahlstrom எடுத்துரைத்தார்.ஒவ்வொரு பேரிடர் நேரத்திலும்
அரசு மற்றும் பொதுச் சேவைகள் செயல்பட்டால் மட்டும் போதாது, தனிப்பட்டவர்களும் இணைந்து
இவ்விடர் களையும் செயல்பாடுகளில் ஈடுபடுவதே நன்மை பயக்கும் என்று ஐ.நா.வெளியிட்டுள்ள
அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.