லிபியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க இராணுவ சக்தியல்லாத பிற வழிகளைத் தேட வேண்டும் -
திருப்பீடத்தின் பிரதிநிதி
மார்ச் 09,2011. லிபியா சந்தித்து வரும் பிரச்னைக்கு வெளிநாடுகள் இராணுவத்தின் மூலம்
தீர்வு காண நினைப்பது மேலும் பல ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கும் என்று வத்திக்கான் அதிகாரி
கூறினார். திருப்பீடத்தின் பிரதிநிதியாக லிபியாவின் Tripoli யில் உள்ள ஆயர் Giovanni
Martinelli வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,
லிபியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க இராணுவ சக்தியல்லாத பிற வழிகளைத் தேட வேண்டும் என்று
கூறினார். இப்பிரச்சனையின் மத்தியில் லிபியாவை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும்
89,000 பங்களாதேஷ் மக்களுக்கு அங்குள்ளத் திருச்சபை பல வழிகளிலும் தஞ்சம் அளித்து வருகிறதென்று
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. பங்களாதேஷ் மக்களை மீண்டும் தங்கள் நாட்டிற்குக்
கொண்டு வர அரசு இயலாத நிலை உருவாகியுள்ளதால், இத்தாலிய ஆயர் பேரவையின் நிதி உதவியுடன்
அம்மக்களுக்கு லிபியத் தலத்திருச்ச்சபை உதவிகள் செய்யவேண்டுமென்று பங்களாதேஷ் தலத்திருச்சபை
விண்ணப்பித்துள்ளது என்று Rajshahi மறைமாவட்ட ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ (Gervas Rosario)
கூறினார்.இந்தியாவிலிருந்து லிபியாவில் பணி புரிந்த 18000 பேரில் இன்னும் 1700 பேர் அங்கிருந்து
வெளியேறக் காத்திருக்கின்றனர் என்றும், அதேபோல், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ்
ஆகிய நாட்டு மக்களையும் வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் செய்திகள்
கூறுகின்றன.