இயேசுவின் இறப்புக்கு யூதர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பு இல்லை என்ற திருத்தந்தையின்
கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றிக் கடிதம்
மார்ச் 04,2011. இயேசுவின் இறப்புக்கு யூதர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பு இல்லை
என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது புதிய நூலில் குறிப்பிட்டிருப்பதற்குத் தனது நன்றியைத்
தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாஹூ. ஆண்டுக்கணக்காய்
யூத மக்கள் வெறுக்கப்படுவதற்கு அடிப்படையாக இருந்தத் தவறானக் குற்றச்சாட்டை திருத்தந்தை
நீக்கியிருக்கிறார் என்று அக்கடிதத்தில் சொல்லியிருக்கிறார் நெத்தான்யாஹூ. திருத்தந்தையை
விரைவில் நேரிடையாகச் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். நாசரேத்தின்
இயேசு: புனித வாரம் - எருசலேம் நுழைவிலிருந்து உயிர்ப்பு வரை (Jesus of Nazareth: Holy
Week -- From the Entrance into Jerusalem to the Resurrection) என்ற தலைப்பிலான திருத்தந்தையின்
நூல் வருகிற வியாழனன்று வெளியாகும்.