13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கானத் தயாரிப்பு வரைவுத் திட்டம்
மார்ச் 04,2011. 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும்
13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கானத் தயாரிப்பு வரைவுத் திட்டம் இவ்வெள்ளியன்று நிருபர்
கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இத்தயாரிப்பு வரைவுத் திட்டத்தை வெளியிட்டுப் பேசிய
இந்த மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் Nikola Eterović, உலகளாவிய திருச்சபையை மனதிற்கொண்டு
இது இலத்தீன், ப்ரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலியம், போலந்து, போர்த்துக்கீசியம், இஸ்பானியம்,
ஜெர்மானியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளிவந்துள்ளது என்றார். இவ்வுலக ஆயர்கள் மாமன்றம்
“கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி” என்ற தலைப்பில் நடைபெறும்.
இந்தத் தலைப்பைப் பிரதிபலிக்கும் விதத்தில் இத்தொகுப்பு, புதிய நற்செய்தி அறிவிப்புப்
பணி, இயேசு கிறிஸ்துவின் அறிவித்தல், கிறிஸ்தவ அனுபவத்திற்கு இட்டுச் செல்லுதல் என மூன்று
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் 71 கேள்விகள் உள்ளன என்றும் கூறினார்
பேராயர் Eterović. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அடித்தளமாக இருப்பவர் தூய
ஆவியே என்றுரைத்த பேராயர், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்த உலக ஆயர்கள் மாமன்றம்
திருச்சபைக்குப் புதுப்பிக்கப்பட்ட உந்துதலைத் தர வேண்டுமென்று எல்லாரும் செபிக்குமாறும்
கேட்டுக் கொண்டார்.