அலெக்சாண்டர் கிரகாம் பெல் , ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847-ம் ஆண்டு
மார்ச் 3-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை மெல்வில் பெல் பேச்சுக்கலைப் பயிற்சியில் சிறந்து
விளங்கினார். ஒலி உண்டாவதற்குக் காரணமான குரல்வளை, நாக்கு, தொண்டை, உதடுகள் ஆகியவற்றின்
பங்கு பற்றி விளக்கும் ஒலிப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர். கிரகாம் பெல்லும்
பள்ளியில் படிக்கும்போதே மற்றவர்களுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தல், இசை கற்பித்தல்
ஆகியவற்றில் ஈடுபட்டார் . 1865-ம் ஆண்டு மின்சாரத்தின் வழியே பேசும் ஒலியை செலுத்தும்
எண்ணம் அவருக்குத் தோன்றியது . 1866-ம் ஆண்டு முதல் பல ஆய்வுகளில் கிரகாம் பெல் ஈடுபட்டார்.
1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் குரல் உறுப்புகள் பற்றிய பேராசிரியராகப் பணியாற்றினார். தொலைபேசியைக்
கண்டுபிடிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரே, தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம் பெல்,
ஜெர்மனியின் பிலிப் ஆகிய 4 பேரும் தனித்தனியே முயற்சித்தனர். இறுதியில் கிரகாம் பெல்
வெற்றி பெற்றார் . 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி அமெரிக்க அரசு கிரகாம் பெல் கண்டுபிடிப்பை
ஏற்றுக்கொண்டு தொலைபேசிக்கானக் காப்புரிமையை வழங்கியது. 1877-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி
' பெல் தொலைபேசி நிறுவனம் ' உருவாக்கப்பட்டது. கிரகாம் பெல் தனது கண்டுபிடிப்பால் முப்பதாவது
வயதில் பெரும் புகழுக்கும், செல்வத்திற்கும் சொந்தக்காரர் ஆனார். தொலைபேசியைக் கண்டுபிடித்த
பிறகு கிரகாம் பெல் 45 ஆண்டுகள் தனது அறிவியல் வாழ்க்கையை மேற்கொண்டார் . 1922-ம்
ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி அவர் இறந்தபோது, அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வண்ணம் அமெரிக்காவில்
எல்லாத் தொலைபேசிகளும் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டன.