புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசா பெயரில் ஆய்வுத் துறை
மார்ச்01,2011. புதுடெல்லி இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம், “வறுமையும் வளர்ச்சியும்”
பற்றிய ஆய்வுத் துறையைத் தொடங்கி அதனை அருளாளர் அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய துறையானது, அப்பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்
துறையில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அருளாளர் அன்னை தெரேசா பெயரில்
இயங்கவுள்ள இத்துறையானது, எய்டஸ், தொழுநோயாளர்கள், தெருச் சிறார், அகதிகள் மற்றும் சமூகத்தில்
நலிந்தவர்கள் குறித்த விவகாரங்களில் பாடங்களை நடத்தும் என்று பல்கலைக்கழகத்திலிருந்து
வெளியான செய்திகள் கூறுகின்றன. இந்த விவகாரங்களில் உண்மையாகவே அர்ப்பணித்துப் பணி
செய்வதற்குத் தேவையான நடைமுறை பயிற்சிகள் உட்பட அனைத்தும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது