உலகின் பாரம்பரிய வளங்கள் பாதுகாக்கப்படுமாறு யுனெஸ்கோ அழைப்பு
மார்ச்01,2011. மனித சமுதாயத்தின் பாரம்பரிய வளங்கள், அழிவு, கலவரங்கள் மற்றும் திருட்டுக்களிலிருந்து
பாதுகாக்கப்படுமாறு யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா போக்கோவா கேட்டுக் கொண்டார். ஆப்கானிஸ்தானின்
பாமியானில் பிரம்மாண்டமான புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டை நினைவுகூர்ந்த
நிகழ்வில் பேசிய யுனெஸ்கோ என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும்
கலாச்சார இயக்குனர் போக்கோவா, ஆப்கானிஸ்தானில் கடும் மோதல்களில் அழிக்கப்பட்ட இந்த இரண்டு
புராதனப் புத்த சிலைகளும் 1500 வருடங்கள் வரலாற்றைக் கொண்டது என்றார். பாமியன் பகுதியில்
13ம் நூற்றாண்டு வரையிலான காந்தாரப் பள்ளியின் வளமையான புத்தமதக் கலைகளில் எஞ்சியுள்ள
பகுதிகளைப் பாதுகாக்கும் பணியில் யுனெஸ்கோ ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். 2001ம்
ஆண்டு மார்ச் 2ம் தேதி இந்தப் புத்த சிலைகள் அழிக்கும் நாச வேலைகள் தொடங்கின.