மத்தியப்பிரதேசத்தில் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபையின்
முயற்சிகள்
பிப்.24,2011. இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் வேளாண்மைப் பிரச்சனைகளால் தற்கொலைக்குத்
தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில்
கடந்த இரு மாதங்களாய் நிலவும் கடுமையான பனியால் இதுவரை அம்மாநிலம் சந்தித்திராத அளவில்
பயிர்கள் பெரிதும் அழிந்துள்ளன. எனவே, கடந்த 86 நாட்களில் அப்பகுதியில் 136 விவசாயிகள்
தற்கொலை செய்துள்ளதாக மத்தியப் பிரதேச அரசு அண்மையில் அறிவித்தது. அரசின் இவ்வறிவிப்பைத்
தொடர்ந்து, விவசாயிகளின் குடும்பத்திற்குத் தேவையான வாழ்வு ஆதாரங்களை போபால் உயர்மறை
மாவட்டம் செய்ய முன் வந்துள்ளதென பேராயர் Leo Cornelio தெரிவித்தார். மனித சமுதாயத்திற்குத்
தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளே பட்டினியைச் சந்திக்கும் சூழ்நிலை மிகக் கொடூரமானதென்று
பேராயர் Cornelio தன் கவலையை வெளியிட்டார்.