இஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளில் பஙகேற்கும் 300000 இளையோர்
பிப்.24,2011. வருகிற ஆகஸ்ட் மாதம் 11 முதல் 15 வரை இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில்
நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் 2011ஐ முன்னிட்டு, அந்நாட்டிற்கு வருகை தரும் 3 இலட்சம்
இளையோரை வரவேற்க அந்நாடு தயாராகி வருகிறது. உலக இளையோர் மாநாட்டிற்கு முன்னதாக, இஸ்பெயினின்
மறைமாவட்டங்களில் கத்தோலிக்கக் குடும்பங்கள் உலக இளையோரை வரவேற்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் Javier Igea கூறினார். மாநாட்டிற்கு முந்திய ஒரு சில
நாட்கள் இஸ்பானிய கலாச்சாரம், அங்குள்ள கத்தோலிக்க வாழ்வு இவைகளை வெளிக்கொணரும் பல நிகழ்ச்சிகள்
நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இளையோர் தங்கள் இல்லங்களில் தங்குவதற்கென, சிறப்பாக,
ஏழை நாடுகளில் இருந்து வரும் இளையோர் எவ்வித கட்டணமும் இல்லாமல் தங்குவதற்கென பல குடும்பங்கள்
முன் வந்துள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இதுவரை இம்மாநாட்டில் கலந்து
கொள்ள 137 நாடுகளில் இருந்து 150000க்கும் அதிகமான இளையோர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும்,
இஸ்பெயினில் உள்ள 63 மறைமாவட்டங்களில் 12 மறை மாவட்டங்களின் தங்குமிடங்கள் முழுமையாக
பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.