1847ம் ஆண்டு நியூயார்க் மாநகரின் சுங்கத்துறை அலுவலகத்திற்கு ஒரு புத்தகம் வந்து சேர்ந்தது.
அந்தப் புத்தகத்தைக் கண்டதும் அலுவலகத்தில் இருந்த அத்தனை அதிகாரிகளும் எழுந்து நின்று
மரியாதை செலுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இவ்வித மரியாதையைப் பெற்ற அப்புத்தகம் Johannes
Gutenberg என்பவரால் அச்சிடப்பட்ட விவிலியம். நியூயார்க்கின் அருங்காட்சியகம் ஒன்றில்
வைக்கப்படுவதற்காக அது வரவழைக்கப்பட்டிருந்தது. அச்சு இயந்திரத்தின் புதியதொரு வடிவைக்
கண்டுபிடித்த Gutenberg, தனது இயந்திரத்தில் முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்ட புத்தகம்
விவிலியம். இதை இவர் அச்சிட்டு வெளியிட்ட நாள் 1455ம் ஆண்டு பிப்ரவரி 23. இவரது முதல்
வெளியீட்டில் 48 விவிலியப் பிரதிகளை அச்சிட்டார். அவைகளில் இன்று 47 பிரதிகள் உலகின்
பல நாடுகளில் அருங்காட்சியகங்களில், ஆய்வுக் கூடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த 47 பிரதிகளில் ஜெர்மனியில் 12ம், அமெரிக்காவில் 11ம், வத்திக்கானில் 2 பிரதிகளும்
உள்ளன. கீழை நாடுகளிலேயே ஜப்பானில் மட்டும் ஒரு பிரதி பாதுகாக்கப்பட்டு வருகிறது.உலகின்
பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ள ஒரு நூல் விவிலியம். காகிதங்களில்
பதிந்திருக்கும் கடவுளின் வார்த்தைகள் மனித மனங்களிலும் ஆழமாகப் பதிய விழைவோம்.