2011-02-22 15:43:39

கல்வி அமைப்பானது அரசியலிலிருந்து விடுதலைப் பெற்றதாய் இருக்க வேண்டும்


பிப்.22, 2011. இலங்கையில் கல்வி அமைப்பானது அரசியலிலிருந்து விடுதலை பெற்றதாய், பெற்றோரின் உரிமைகளை மதிப்பதாய் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தலத்திருச்சபை அதிகாரி ஒருவர்.

நாட்டிற்குத் தேவையான நல்ல திறமைசாலிகளை உருவாக்குவதற்கு கல்வி முறையில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்ற இலங்கையின் புனித பேதுரு பள்ளியின் முதல்வர் குரு த்ராவிஸ் கபிரியேல், ஒவ்வொரு மாணவனின் திறமையையும் மதிப்பதாயும் ஆசிரியர்களின் ஆர்வத்தையும் ஆய்வுகளையும் அனுமதிப்பதாயும் கல்வி முறையின் சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும் என்றார்.

ஓர் அரசு கல்வி முறையை முற்றிலுமாக தன் கீழ் கொண்டிருப்பது பள்ளிகளை அரசு இயந்திரமாக நடத்துவது போல் இருக்கும் என்ற அவர், தங்கள் குழந்தைகளுக்கான கல்விக்கூடங்களைத் தேர்ந்தெடுக்க பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த அண்மை ஆய்வுகளின் முடிவுகள் பற்றியும் எடுத்துரைத்த குரு கபிரியேல், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் கல்வித்திட்டங்களுக்கு இயைந்த வகையில் இலங்கையின் வழிமுறைகளும் இருக்க வேண்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.