சென்ற ஆண்டில் வத்திக்கான் நிதி நிலைமை திருப்திகரமாக அமைந்துள்ளது
பிப்.18,2011. இச்செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் வத்திக்கான் நிதித் துறையின் ஆண்டு
கூட்டம் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
2010ம் ஆண்டுக்கான வத்திக்கானின் நிதிநிலைமை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு
அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. உலகெங்கும் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் வத்திக்கான்
நிதி நிலைமையையும் ஓரளவு பாதித்துள்ளன என்றாலும், பொதுவாக, சென்ற ஆண்டின் நிதிநிலைமை
திருப்திகரமாக அமைந்துள்ளதென்று திருப்பீடத்தின் நிதித்துறை தலைவர் கர்தினால் Velasio
De Paolis கூறினார். வத்திக்கானின் நிர்வாக அலுவலகம், மற்றும் வத்திக்கானின் தொடர்புத்
துறைகளான வத்திக்கான் வானொலி, வத்திக்கான் செய்தித் துறை, வத்திக்கான் தொலைக்காட்சி ஆகியவை
உறுதியான நிலையில் உள்ளன என்று சென்ற ஆண்டின் நிதி அறிக்கை கூறுகிறது.விசுவாசிகள் அளிக்கும்
நிதி உதவிகளே திருப்பீடத்தின் முக்கியமான வருவாய் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் De
Paolis, திருத்தந்தையின் உலகளாவியப் பணிகளுக்குப் பக்கபலமாய் இருக்கும் விசுவாசிகளின்
தாராளமனதைப் பாராட்டினார்.