நிதிகளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் வெட்ட வெளிச்சமான வழிகளை திருச்சபை
பின்பற்ற வேண்டும் - இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர்
பிப்.17,2011. நிதிகளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் திறந்த, வெட்ட வெளிச்சமான வழிகளை
திருச்சபை பின்பற்ற வேண்டுமென்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco
கூறினார். கத்தோலிக்கத் திருச்சபைக்குப் பல வழிகளிலும் நிதி உதவிகள் செய்து வரும்
இத்தாலிய ஆயர் பேரவையின் நிதி சார்ந்த கூட்டத்தை இச்செவ்வாயன்று துவக்கி வைத்துப் பேசிய
கர்தினால் Bagnasco, நிதித் துறையில் திறந்ததொரு வழிமுறை இருந்தால் மட்டுமே மக்களுக்கு
இவ்வழிகளில் நம்பிக்கை பிறக்கும் என்று தெளிவாக்கினார். கத்தோலிக்கத் திருச்சபையில்
மேற்கொள்ளப்படும் நிதி உதவிகள் அனைவரும் மேற்கொள்ளும் இணைந்த பொறுப்பு, மற்றும் திறந்த,
வெட்டவெளிச்சமான வழிமுறை ஆகிய இரு பெரும் தூண்களின் மேல் கட்டப்பட வேண்டும் என்று கர்தினால்
வலியுறுத்தினார்.திருச்சபையில் நேர்மை, சரியான வழிகள் எப்போதும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன
என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Bagnasco, இன்றைய காலகட்டத்தில் நிதித் துறையில்
உள்ள ஒவ்வொருவரும் நிதிகள் பெறுவது, கொடுப்பது ஆகிய அனைத்து விடயங்களிலும் முழு அறிவு
பெற்றிருப்பது அவசியம் என்று கூறினார்.