கர்நாடகாவில் இந்து தீவிரவாத அமைப்புகளால் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய
ஊர்வலம்.
பிப் 15, 2011. கர்நாடகா மாநிலத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளால் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து மங்களூர் நகரில் ஊர்வலம் ஒன்றை
மேற்கொண்டனர்.
குழந்தைகளுக்கான கல்வி மற்றும் முதியோர்க்கான மருத்துவ வசதிகள்
என சமுதாய அக்கறையுடன் செயல்படும் கிறிஸ்தவர்கள் மீது இந்து தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து
தாக்குதலை நடத்தி வருவது இந்து மத கொள்கைகளாகவோ நாட்டுப்பற்றாகவோ இருக்க முடியாது என்றார்
இவ்வூர்வலத்திற்கு ஏற்பாடு செய்த அலி ஹாசன்.
மங்களூர் இஸ்லாமிய மத்திய அவையின்
ஒருங்கிணைப்பாளரான இவர் உரைக்கையில், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவக்கோவில்கள் தாக்கப்பட்டதில்
இந்து தீவிரவாதிகளின் தொடர்பை மறுக்கும் அண்மை அரசின் அறிக்கை குறித்த அதிருப்தியை வெளியிடும்
விதமாக இவ்வூர்வலம் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்
குறித்து தனக்கு சாதகமான ஓர் அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசு 19 கோடி ரூபாயை வீணாக்கியுள்ளதாக
அரசின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் அம்மாநிலத்தின் பெண்கள் அமைப்பின்
முன்னாள் தலைவர் பிலோமினா பெரேஸ்.