2011-02-10 16:14:35

இயற்கைப் பேரிடர்களிலிருந்து நகரங்களையும் மக்களையும் காக்க ஐ.நா.பொதுச் செயலரின் பரிந்துரை


பிப்.10,2011. இயற்கைப் பேரிடர்களில் தங்கள் நாட்டையும், நகர்களையும் காத்தவர்களிடம் இருந்து பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா.தலைமையகத்தில் ஐ.நா.உயர் அதிகாரிகள், மற்றும் உலகின் பல்வேறு பெருநகர மேயர்கள், மற்றும் மனித சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஓர் உயர்மட்டக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.

2010ம் ஆண்டில் மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் 300000 பேர் உயிரிழந்துள்ளனர், 20 கோடியே 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 1100 கோடி டாலர்கள் அளவு அழிவு ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட நகரங்கள் பல்வேறு இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாகும் நிலையில் உள்ளதென ஐ.நா.அமைப்பு கண்டுள்ளதாகவும், அவைகளில் கடைபிடிக்க வேண்டிய பத்து அம்சக் கொள்கைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதென்றும் ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.