மும்பையில் ஏற்பட்ட வன்முறைக்கு வசாய் பேராயர் கண்டனம்
பிப்.09,2011. தனிப்பட்டவர்களுக்கு இடையே உருவான ஒரு சண்டைக்குச் சமயச் சாயம் பூசி இஸ்லாமிய,
கிறிஸ்தவ பூசலாக மாற்றியவர்களை இந்திய ஆயர் ஒருவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். மும்பையில்
வசாய் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்க குரு யோகேஷ் பெரேரா ஆட்டோ ஓட்டும் ஒரு
சில இஸ்லாமிய இளையோரால் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் எழுந்த ஒரு
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, இந்த அசம்பாவிதம் நடந்ததென சொல்லப்படுகிறது.
குரு தாக்கப்பட்ட செய்தி கேட்டு, அப்பகுதியின் சில கிறிஸ்தவ இஸ்லாமிய இளையோரிடையே சண்டைகள்
மூண்டன. இந்த நிகழ்வில் இருதரப்பினர் மேலும் தன் கண்டனத்தைத் தெரிவித்தார் வசாய் உயர்மறைமாவட்டப்
பேராயர் Felix Machado. அப்பகுதியில் நிலவும் பதட்டத்தைத் தீர்க்க கிறிஸ்தவ, இஸ்லாமியத்
தலைவர்கள் வருகிற வெள்ளியன்று சந்திக்க உள்ளனர் என்றும் பேராயர் தெரிவித்தார்.அருள்தந்தை
யோகேஷ் பெரேரா உட்பட, மேலும் ஆறு பேர் மருத்துவ மனையில் உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.