இந்துக்களின் விழாவை முன்னிட்டு மத்தியப் பிரதேச கிறிஸ்தவர்கள் அச்சம்
பிப்.07,2011. இவ்வாரம் நடைபெற உள்ள இந்துக்களின் விழாவை முன்னிட்டு இந்தியாவின் மத்தியப்
பிரதேசத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு தரப்பட வேண்டுமென்று
உயர் நீதி மன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளனர். பிப்ரவரி 10 முதல் 12 வரை, அதாவது,
வரும் வியாழன் முதல் சனிக்கிழமை வரை நர்மதை நதியை மையப்படுத்தி நடத்தப்படும் Narmada
Samajik Kumbh விழாவை முன்னிட்டு அப்பகுதியின் கிறிஸ்தவர்கள், முக்கியமாக, அப்பகுதியின்
பழங்குடி இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு கோரியுள்ளனர். அப்பகுதியில் வாழும்
பழங்குடி கிறிஸ்தவர்கள் இவ்விழாவிற்கு எவ்வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்காத போதும், இவ்விழா
காலத்தில் இவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் வன்முறை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
என்ற அச்சத்தில் இம்மக்கள் நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரியுள்ளனர். கிறிஸ்தவ மக்களுக்கான
பாதுகாப்பை வழங்குமாறு மத்தியப் பிரதேச அரசைத் தாங்கள் கேட்டுக்கொண்டதாகவும், அரசு இது
குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதென்றும் ஜபல்பூர் ஆயர் Gerald Almeida
கூறினார். இவ்விழாக் காலத்தில் 25 இலட்சம் மக்கள் இப்பகுதிக்கு வருகை தருவர் என்றும்,
எனவே தங்கள் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் அரசுக்கு ஆணைகள் பிறப்பிக்க உயர் நீதி
மன்றத்தைத் தாங்கள் அணுகியுள்ளதாகவும் ஆயர் மேலும் கூறினார்.யாரும் சட்டம் ஒழுங்கைத்
தங்கள் விருப்பப்படி பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று
காவல் துறையின் உயர் அதிகாரி Muni Raju கூறியுள்ளார்.