1. திருத்தந்தை : இன்றும் உலகம் கடவுளைத் தேடுவதால் இக்காலம் பணிக்கான நேரம்
பிப்.05,2011. திருச்சபையின் மேய்ப்பர்கள் காலத்தின் போக்கிற்கு வளைந்து கொடுக்காமல்,
உறுதியாக இருந்து தங்கள் வாழ்க்கையால் சாட்சியம் பகருமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
கேட்டுக் கொண்டார்.
இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்காவில் ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு செய்தத் திருப்பலியை
நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வின் நான்கு அடிப்படைக் கூறுகள்
பற்றி விளக்கினார்.
உண்மையின் வறுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் உண்மையின்
ஒளிக்கு அவர்களை அழைத்து வருவதற்கானப் பணிக்கான நேரம் இது என்றும் திருத்தந்தை கூறினார்.
இன்றும்
உலகம் கடவுளைத் தேடுவதால் இக்காலம் பணிக்கான நேரம் என்று ஐந்து புதிய ஆயர்களிடம் உரைத்தத்
திருத்தந்தை, இக்காலத்தின் கொந்தளிக்கும் கடல்களில் நற்செய்தி வலைகளை வீச வேண்டியது இவர்களது
பணி என்று கூறினார்.
இன்றைய நவீன உலகின் பெரும் பகுதி கடவுளைவிட்டுத் தூரமாகச்
செல்வது போன்றும் விசுவாசம் கடந்த காலத்தின் ஒரு பொருளாக நோக்கப்படுவது போல் தெரிந்தாலும்
நீதி, அன்பு, அமைதி ஆகியவற்றுக்காக ஏங்குவோரையும் வறுமையும் துன்பங்களும் அகன்று மகிழ்ச்சியுடன்
வாழ விரும்பும் மக்களையும் காண முடிகின்றது என்றார் அவர்.
பக்தி, தளரா ஊக்கம்,
கிறிஸ்தவராக இருப்பதன் சாரம், ஆண்டவரின் அறுவடையில் பணியாளர்களாக இருப்பது ஆகிய நான்கும்
இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் அடிப்படைக் கிறிஸ்தவக் கூறுகளாக இருக்கின்றன என்றும்
கூறினார் திருத்தந்தை.
திருத்தூதர்களின் போதனைகளைப் பேணிக் காத்தல், திருச்சபை
வாழ்வின் தூணாக இருக்கும் ஒன்றிப்பு, திருச்சபையின் அடிப்படைக் கூறான அப்பம் பிடுதல்-
திருநற்கருணை, திருச்சபை வாழ்வின் தூணாக அமைந்துள்ள செபம் ஆகிய நான்கு கூறுகள் குறித்தும்
விரிவாகத் தனது மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இதற்கு முன்னர்
2007ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி 5 ஆயர்களுக்கும் 2009ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி
5 ஆயர்களுக்கும் திருப்பொழிவு வழங்கியுள்ளார்.