இலங்கையில் காணாமற்போன பத்திரிகை நிருபரைக் கண்டுபிடித்து கொடுக்கும்படி ஐ.நா.விற்கு
மனு
சன.26, 2011. சென்ற ஆண்டு இலங்கையில் காணாமற்போன பத்திரிகை நிருபரைக் கண்டுபிடித்து கொடுக்கும்படி
கொழும்புவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மனு சமர்ப்பிக்கச் சென்ற அவரது துணைவியாருடன் குருக்கள்,
பத்திரிக்கையாளர்கள், மற்றும் கலைஞர்களும் சென்றிருந்தனர். இலங்கையில் நிலவும் அரசியல்நிலை,
சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பு, அரசின் பல்வேறு ஊழல்கள், ஆகியவை குறித்து எழுதிவந்த அரசியல்
ஆய்வாளரும், பத்திரிகை நிருபருமான Prageeth Ekneligoda 2010ம் ஆண்டு சனவரி 24ம் நாள்
முதல் காணாமல் போனார். ஓராண்டு நிறைவு பெறும் இவ்வேளையில் ஐ.நா. இந்த விவகாரத்தில்
தலையிட்டு, காணாமற் போனவரைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டுமென Prageethன் மனைவி ஐ.நா.விற்கு
விண்ணப்பித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் இலங்கையில் கிறிஸ்தவர்கள் உட்பட 14 பத்திரிகை
நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இதற்கிடையே, சனவரி
26 முதல் 30 வரை இலங்கையில் நடைபெறும் Galle இலக்கிய விழாவை உலக எழுத்தாளர்கள் புறக்கணிக்க
வேண்டுமென்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான Noam Chomskyம் Arundhati Royம் அழைப்பு
விடுத்துள்ளனர்.