2011-01-20 14:55:39

நல ஆதரவு சீர்திருத்தங்களில் ஆயர்களின் ஒழுக்க ரீதி பரிந்துரைகள்.


சன.20, 2011. வாழ்வையும் திருமணத்தையும் பாதுகாத்தல், நல ஆதரவு தொடர்புடையவைகளில் ஒழுக்க ரீதி ஏற்புடைய கொள்கைகளை வடித்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களவைப் பிரதிநிதிகளோடு பொதுநலனுக்காக ஒன்றிணைந்து உழைக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

மக்களுக்கான கொள்கை வடிப்பு முயற்சிகளில் வழிகாட்டுதல்கள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், பொருளாதார நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வரும் இவ்வேளையில் அனைவரின் வாழ்வையும் மாண்பையும் பாதுகாக்கவேண்டிய நடவடிக்கையில், பொறுப்பிலுள்ளோர் ஈடுபடவேண்டியது அவசியம் என அதில் கூறியுள்ளனர்.

நாட்டிற்கு மேலும் நீதியையும் மனித மாண்பிற்கான மதிப்பையும் உலகிற்கான அமைதியையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகளில் அரசுப் பிரதிநிதிகளோடும் நல்மனம் படைத்த மக்களோடும் ஒன்றிணைந்து உழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் அமெரிக்க ஆயர்கள், கருவில் வளரும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீரா நோயில் வாடுவோர் ஆகியோரின் குரலாகச் செயல்பட உள்ளதற்கானத் தங்கள் உறுதிப்பாட்டையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.