குருக்களின் பாலியல் குற்றங்களைக் காவல்துறையிடமிருந்து மறைக்க திருச்சபை எந்நாளும் முயன்றதில்லை
சன.20,2011முறைகேடான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள
குருக்கள் மீதான விசாரணைகள் திருச்சபைச் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என
அயர்லாந்து ஆயர்களுக்கு 1997ம் ஆண்டு அனுப்பப்பட்ட கடிதம் தற்போது தவறான அர்த்தம் காணப்பட்டுள்ளது
குறித்து விளக்கத்தை வழங்கியுள்ளார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ
லொம்பார்தி.
1997ம் ஆண்டு அயர்லாந்திற்கான அப்போதைய திருப்பீடத்தூதுவர் பேராயர்
Luciano Storero அந்நாட்டு ஆயர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது அயர்லாந்து RTE தொலைக்காட்சி
நிறுவனம் வழி வெளியிடப்பட்டு, திருப்பீடம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பற்றிக்
கருத்து வெளியிட்ட திருப்பீடப்பேச்சாளர், குருக்களின் பாலியல் குற்றங்களைக் காவல்துறையிடமிருந்து
மறைக்கவோ, நாட்டுச் சட்டங்களை மதிக்காமல் செயல்படவோ அக்கடிதத்தில் எப்பகுதியிலும் கேட்கப்படவில்லை
என்பதைச் சுட்டிக்காட்டினார். குற்றஞ்சாட்டப்பட்டவர் உண்மையில் தவறு செய்தாரா என்பதை
விசாரிக்கையில் திருச்சபை சட்டங்கள் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதையே திருப்பீடத்தூதரின்
கடிதம் வலியுறுத்துகிறதேயொழிய, அரசு சட்டங்கள் மதிக்கப்படக்கூடாது என்பதையல்ல என மேலும்
கூறினார் குரு லொம்பார்தி.