போலந்து திருச்சபைப் பணிகளுக்கான பாப்பிறை அமைப்பின் அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தை
பாராட்டு.
சன 17, 2011. இறைவனுடன் ஆன நட்புணர்வில் பெறப்படும் ஞானத்துடன், வாழ்விற்கான தூண்டுதலையும்
ஆதரவையும் திருநற்கருணையிலும் நற்செய்தியிலும் கண்டுகொள்ளும் குருக்கள் இன்றையத் திருச்சபைக்குத்
தேவைப்படுவதாகக் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். போலந்து திருச்சபை பணிகளுக்கானப்
பாப்பிறை அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை,
உரோம் நகரில் பயிலும் போலந்து குருக்களின் பயிற்சிக்கு இயைந்த சூழலை உருவாக்கித் தரும்
இவ்வமைப்பின் பணிகளைப் பாராட்டினார். திருச்சபையின் இதயத்துடன்,புனித பேதுருவுடன் நெருங்கிய
விதத்தில் தொடர்புகொண்டு கனிதரும் முதிர்ந்த மரங்களாய் வாழுமாறும் போலந்து குருக்களுக்கு
அழைப்பு விடுத்தார் பாப்பிறை. இயேசுவில் வழியையும், உண்மையையும், வாழ்வையும், இரக்கம்
நிறை தந்தையின் முகத்தையும் ஒரே குடும்ப உணர்வில் ஒவ்வொருவரும் கற்றுகொண்டு அகில உலகத்
திருச்சபைக்கும் தலத்திருச்சபைகளுக்கும் தாராள மனதுடன் பணியாற்ற, புனித பேதுருவின் வழி
வந்தவர் மீதான அன்பு உதவட்டும் என அழைப்பு விடுத்தார் பாப்பிறை.