திருமுழுக்கின் வளங்களை மீண்டும் கண்டுகொள்ள ஊக்குவித்து வரும் திருமுழுக்குத் தயாரிப்பு
குழுவின் பணிகளைப் பாராட்டினார் பாப்பிறை.
சன 17, 2011. திருச்சபையில் திருமுழுக்குப் பெற விரும்புபவர்களைத் தயாரிக்கும் குழுவினரை
இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருமுழுக்கின்
வளங்களை மீண்டும் கண்டுகொள்ள ஊக்குவித்து வரும் இக்குழுவின் பணிகளைப் பாராட்டினார்.
திருப்பீடத்திற்கும் திருச்சபை மேய்ப்பர்களுக்குமான, புதல்வருக்குரிய கீழ்ப்படிதலுடன்
திருமுழுக்கெனும் கொடையின் மகிழ்வு குறித்து கண்டுகொள்ள இத்திருமுழுக்குத் தயாரிப்புக்
குழு உழைத்து வருவது புதிய நற்செய்தி அறிவிப்பிற்கான பங்களிப்புமாகும் என்றார் பாப்பிறை. ஐந்து
கண்டங்களில் ஏற்கனவே பணியாற்றி வரும் ஏறத்தாழ 600 குடும்பங்களோடு தற்போது மேலும் 200
குடும்பங்களை நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கென அனுப்புவது குறித்து மகிழ்வதாகவும் எடுத்துரைத்தார்
திருத்தந்தை. திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீட்புப்பணியில் ஈடுபட்டு செயலாற்ற
ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.