கர்தினால் பெர்த்தோனே : கடும் நிலநடுக்கத்தால் துன்பப்படும் ஹெய்ட்டி
மக்களைக் கடவுள் கைவிடவில்லை
சன.13,2011. கடும் நிலநடுக்கத்தால் துன்பப்படும் ஹெய்ட்டி மக்களைக் கடவுள் கைவிடவில்லை,
மாறாக அவர்களைத் திருச்சபை உறுப்பினர்களின் தோழமையுணர்வு வழியாகக் கடவுள் வழி நடத்தி
வருகிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார். ஹெய்ட்டி
நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு இப்புதனோடு ஓராண்டு நிறைவுற்றதையடுத்து இப்புதன்
மாலை உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திய கர்தினால்
பெர்த்தோனே இவ்வாறு கூறினார். மனிதாபிமான உணர்வில் சிறந்து விளங்கும் மற்றும் இறைவனின்
செய்தியை அறிவிக்கும் திருச்சபை, துன்பப்படும் ஹெய்ட்டி மக்களுடனானத் தனது ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவிப்பதாகவும் கூறினார்.ஹெய்ட்டியில் கடந்த ஆண்டு சனவரி 12ம் தேதி இடம் பெற்ற நிலநடுக்கத்தில்,
பேராயர் ஜோசப் செர்ஜே மியோட் உட்பட இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்ததையும்
அவர் தனது மறையுரையில் குறிப்பிட்டார்.