அமெரிக்காவில் உல்லாசப் படகில் பயணம் செய்வதற்கு ஓர் இந்தியரும் ஓர் அமெரிக்கரும் சென்றனர்.
படகு புறப்படும் நேரம் நெருங்கியது. அமெரிக்கர் அவசரப்பட்டார். இந்தியர் பதட்டமில்லாமல்
நடந்தார். அமெரிக்கர் அவரிடம், "உங்களுக்கு நேரத்தின் அருமை தெரியவில்லை." என்று சொன்னார்.
இந்தியர் அவரிடம், "நீங்கள் நேரத்தின் அடிமைகள். நாங்கள் வாழ்வதோ நேரமற்ற நிரந்தரத்தில்."
என்று அமைதியாகக் கூறினார். இந்த இந்தியரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath
Dutta). இவரை உலகம் சுவாமி விவேகானந்தர் என்று போற்றுகின்றது. 1863ம் ஆண்டு சனவரி 12ம்
நாள் கொல்கத்தாவில் பிறந்த விவேகானந்தர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலை சிறந்த சீடர்.
விவேகானந்தரின் விவேகம் நிறைந்த பொன் மொழிகளில் ஒரு சில இவை:
உன்னையே
நீ நம்பாவிடில், கடவுளை உன்னால் நம்ப முடியாது. மிருகத்தை மனிதனாக்கி, மனிதனை தெய்வமாக்குவது
மதம். எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதே கல்வி. தகவல்களைச் சேகரிப்பது அல்ல. உண்மைக்காக
எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்ய முடியாது. அமெரிக்கா
ஒரு பெரும் நாடு. ஆனால், இங்கு வாழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அமெரிக்கர்கள் வாழ்வின்
பல அம்சங்களுக்கும் மேலாக, பணத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நீங்கள்
இன்னும் பல உண்மைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் இந்திய நாட்டைப் போல் நீங்களும்
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், நீங்களும் எங்களைப் போல் அறிவில் வளர்ந்திருப்பீர்கள்.
இவைகளையும்
இவைகளை விட இன்னும் அதிக ஆழமான கருத்துக்களையும் உலகறியச்செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
அனைத்திற்கும் மேலாக, இந்திய மண்ணில் உருவாகி, ஆசியாவின் எல்லைகளை அதிகம் தாண்டாமல் இருந்த
இந்து மதத்தினை உலகறியச் செய்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர்.