ஐரோப்பிய காப்டிக் கிறிஸ்தவர்கள் எகிப்திய மக்களுக்காகச் செபம்
சன.07,2011. எகிப்தில் இந்த புத்தாண்டு தினத்தில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரானத் தாக்குதலில்
இறந்தவர்கள் நினைவாக இஞ்ஞாயிறன்று செப வழிபாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் ஐரோப்பிய
காப்டிக் கிறிஸ்தவர்கள்.
அலெக்சாண்டிரியாவில் காப்டிக் கிறிஸ்தவ ஆலயத்துக்கு வெளியே
நடந்த இந்தத் தாக்குதலில் 22 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இவர்களோடு
தங்களது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டும் விதமாக இம்மாதம் 9ம் தேதி ஞாயிறன்று இங்கிலாந்தின்
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் மையத்திலுள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் செப வழிபாடு நடை பெறும்.
எகிப்தில் ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும்,
வன்முறை மற்றும் பயங்கரவாதப் பயமின்றி அனைவரும் அமைதியில் வாழவும் ஐரோப்பிய காப்டிக்
கிறிஸ்தவர்கள் இந்நாளில் செபிக்கவிருக்கின்றனர்