வெளிநாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெயர்வோர் வரிசையில் இந்திய மருத்துவர்களும் தாதியர்களும்.
ஜன 03, 2010. இந்திய மருத்துவர்களும் தாதியர்களும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வது
அதிகரித்துள்ளது என, அனைத்துலக புலம் பெயர்வு பற்றிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட அனைத்துலக புலம் பெயர்வு குறித்த, 2010 ம் ஆண்டிற்கான அறிக்கையில்,
இந்திய மருத்துவர்கள் 55 ஆயிரத்து 794 பேரும், தாதியர்கள் 23 ஆயிரம் பேரும் ஆஸ்திரேலியா,
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்திய
மருத்துவர்களுள் 8 சதவீதம் பேரும், தாதியர்களுள் 3 சதவீதம்
பேரும் வெளிநாடுகளுக்குச்
சென்றுள்ளனர்.
பெரும்பாலான நாடுகளில், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறை
உள்ளது. இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய மக்கள்
தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 70 மருத்துவர்களும் 80 தாதியர்களும் உள்ளனர். பொருளாதாரத்தில்
பின் தங்கிய நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 20 மருத்துவர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில்
ஒரு லட்சம் பெருக்கு 310 மருத்துவர்களும், அமெரிக்காவில் 240 மருத்துவர்களும் உள்ளனர்.