இயேசு
கிறிஸ்துவுக்குப் புகழ். வத்திக்கான் வானொலியிலிருந்து வாழ்த்துக்கள்.
தமிழ்
பிரிவில் பணிபுரியும் ஜெரோம், தெரேசா, கிறிஸ்டோபர் ஆகிய மூவரும் வத்திக்கான் வானொலி நேயர்கள்
அனைவருக்கும் எங்கள் மனம்கனிந்த, உளம்நிறைந்த கிறிஸ்து பிறப்புவிழா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
உங்கள் ஒவ்வொருவரையும், உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவரையும் குழந்தை
இயேசு தன் பிஞ்சுக்கரங்களால் ஆசீர்வதிப்பாராக!
2010ம் ஆண்டில் வத்திக்கான் வானொலி
மூலம் நாம் மேற்கொண்ட உறவுப் பயணம் வரும் ஆண்டுகளிலும் தொடர இறைவன் அருள் புரிவாராக!
கருத்துப் பரிமாற்றங்களில் அதிக அளவு உறவு கொண்டிருந்த நாம், செப்டம்பர் முதல் ஞாயிறு
துவங்கி, உள்ளத்தாலும் உறவு கொண்டோம். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற நமது செப முயற்சியின்
வழியாக, நாம் அனைவரும் ஒரு குடும்பமாய் உள்ளத்தால் ஒன்றிணைந்து செபிக்கத் துவங்கியுள்ளோம்.
நமது செபங்கள் நம்மையும், நம் குடும்பங்களையும் சுற்றி மட்டும் அமையாது, உலகின் பல தேவைகளுக்காகவும்
அமைந்து வருவது மன நிறைவைத் தரும் ஒரு முயற்சி.
விண்ணகத் தூதர்கள் கிறிஸ்து பிறந்த
முதல் திருநாளன்று இடையர்கள் மூலம் உலகிற்குத் தந்த நற்செய்தி நம் ஒவ்வொருவருக்கும் இன்றும்
தரப்படுகிறது: லூக்கா நற்செய்தி 2: 10-14வானதூதர் இடையர்களிடம்,
“அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும்
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத்
தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில்
கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு
மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று
கடவுளைப் புகழ்ந்தது.