பெத்லகேமில் விற்கப்படும் நினைவுப்பரிசுப் பொருட்களில் சிலுவைச்சின்னம் நீக்கம்
டிச.23, 2010. பெத்லகேமில் விற்கப்படும் நினைவுப்பரிசுப் பொருட்களில் சிலுவைச் சின்னம்
நீக்கப்பட்டுள்ளது.
பெத்லகேமில் உள்ள கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவின் வடிவங்களைத்
தாங்கிய சட்டைகள், மற்றும் பிற நினைவுப் பொருட்களில் அப்பேராலயத்தின் மேலுள்ள சிலுவைச்
சின்னம் அகற்றப்பட்ட உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனியப் பகுதிகளில் வெகு
வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் எதிரொலியாக இவ்விதம் நிகழ்ந்து வருகிறது
என்று செய்திகள் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு காலத்தில் பாலஸ்தீனப்
பகுதியில் உள்ள பெத்லேகேம் பேராலயத்திற்குச் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடுவர்.
அங்கு விற்பனையாகும் நினைவுப் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்வர். இவ்வாண்டு கூடியுள்ள
சுற்றுலாப் பயணிகள் வாங்கியுள்ள இப்போருட்களில் சிலுவை அடையாளம் இல்லாதது அவர்களை வியப்பில்
ஆழ்த்தியிருப்பதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்களையொட்டி, இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனியப் பகுதியில்
உள்ள இஸ்ரேல் இராணுவத்தினர் பெத்லேகேம் செல்லும் பயணிகளிடம் அதிகக் கேள்விகள், வாக்குவாதங்கள்
இன்றி அவர்களை அனுமதிக்கும்படி ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம்
கூறியுள்ளது