பெய்ஜிங் எட்டாவது தேசிய கத்தோலிக்க மாநாடு குறித்து வத்திக்கான் வருத்தம்
டிச.17,2010. சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற எட்டாவது தேசிய கத்தோலிக்க மாநாடு குறித்து
வத்திக்கான் வருத்தம் அடைந்துள்ளதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட
அறிக்கை கூறுகிறது.
சீனாவில் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் ஆயர்கள் இந்த
மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கடந்த மார்ச் மாதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்,
எனினும், இதில் கலந்து கொள்வதற்குப் பல ஆயர்களும் குருக்களும் துறவிகளும் பொதுநிலை விசுவாசிகளும்
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
குடிமக்களின்
வாழ்வையும் மனச்சாட்சியையும் கட்டுப்படுத்தவும் கத்தோலிக்கத் திருச்சபையின் உள்ளார்ந்த
வாழ்வில் தலையிடவும் தொடர்ந்து ஆவல் கொள்வது சீனாவிற்கு எவ்விதத்திலும் பெருமை சேர்க்காது
என்று வத்திக்கானின் அறிக்கை கூறுகிறது.
இந்த டிசம்பர் 7 முதல் 9 வரை சீனக் கத்தோலிக்கப்
பிரதிநிதிகளின் தேசிய மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றது.