யூதக் குழந்தைகள் மூவரைக் காப்பற்றிய இயேசுசபைக் குருவுக்கு மரியாதை
டிச.16, 2010. யூதக் குழந்தைகள் மூவரைக் காப்பற்றிய ஒரு இயேசுசபைக் குரு அண்மையில் உரோம்
நகரில் கௌரவிக்கப்பட்டார். உலக நாடுகளில் வாழும் நல்லவர்களைச் சிறப்பிக்கும் விழா
ஒன்று உரோம் நகரில் இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அருள்தந்தை Raffaele
de Ghantuz Cubbe என்ற இயேசுசபைக் குரு காட்டிய மனிதாபிமானம், மற்றும் வீரம் பாராட்டப்பட்டன. Graziano,
Marco, Mario என்ற மூன்று யூதச் சிறுவர்களை இரண்டாம் உலகப் போரின் நேரத்தில் நடந்த மனித
வேட்டையிலிருந்து காப்பாற்ற, அருள்தந்தை Cubbe அவர்களைத் தன் பள்ளியில் ஒளித்து வைத்து,
அவர்களது பெயர்களையும் மாற்றி, அவர்களைக் காப்பாற்றினார். ஐரோப்பாவின் பல நாடுகளில்
யூத குலம் வேட்டையாடப்பட்ட போது, யூதர்களைக் காப்பாற்றிய பல நாடுகளைச் சார்ந்த பலரை ஒவ்வோர்
ஆண்டும் Yad Vashem Holocaust Memorial என்ற அமைப்பு சிறப்பித்து வருகிறதென்றும், இதுவரை
இவ்வாறு சிறப்பிக்கப்பட்ட 28,000 பேரில் பல கத்தோலிக்கக் குருக்களும் அடங்குவர் என்றும்
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.1904ம் ஆண்டு பிறந்து 1983ம் ஆண்டு வரை வாழ்ந்த இயேசு
சபை குரு Cubbe, இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென திருத்தந்தை 12ம்
பத்திநாதரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பின் உதவித் தலைவராகப் பணி புரிந்தவர்.