போதைப்பொருள் வியாபாரிகள் திருவிழாக் காலத்தை மதித்து நடக்குமாறு மெக்சிகோ கர்தினால்
அழைப்பு
டிச.15,2010. மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகள் திருவழாக் காலத்தை மதித்து நடக்குமாறு
அந்நாட்டு Guadalajara கர்தினால் Juan Sandoval Iniguez கேட்டுக் கொண்டுள்ளார்.
Guadalupe
அன்னைமரி விழாக் கொண்டாட்டங்களின் போது ஒரு குழு, ஆயுதங்களுடன் சென்று மக்களைத் தாக்கியதில்
குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து போதைப் பொருள் வியாபாரிகளுக்கு
இவ்வாறு அழைப்பு விடுத்தார் கர்தினால் சாண்டோவால் இனிகெஸ்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட
குவாதாலூப்பே அன்னைமரி விழாவின் போது இடம் பெற்ற இவ்வன்முறை குறித்துப் பேசிய கர்தினால்,
சமய வழிபாட்டில் மக்கள் கலந்து கொண்டிருந்த சமயம், இம்மனிதர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து
சரமாறிச் சுட்டனர் என்றார்.
ஏற்கனவே கடும் குற்றங்களைச் செய்து வரும் இவர்களுக்குப்
புனிதப் பொருட்களையாவது மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும், இக்குற்றங்களைச் செய்வதில்
இவர்கள் வெட்கமடையவில்லை என்றும் மெக்சிகோ கர்தினால் கூறினார்.
இந்த டிசம்பர்
10ம் தேதியும் நடைபெற்ற இந்த அன்னைமரி விழா நிகழ்ச்சியின் போது குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்
மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.