திருப்பீடத்திற்கும் PLOஇயக்கதிற்கும் இடையேயான அதிகாரப்பூர்வப்
பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவக்கம்
டிச.09, 2010. திருப்பீடத்திற்கும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கமான PLOவுக்கும் இடையே 2000ம்
ஆண்டு கையெழுத்திடப்பட்ட அடிப்படை ஒப்பந்தத்தையொட்டி இருதரப்பினருக்கும் இடையேயான கருத்துப்
பரிமாற்றங்கள் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளன. பாலஸ்தீனிய அரசுத்தலைவரின்
Ramallah தலைமையில்லத்தில் இவ்வாரம் துவங்கியுள்ள இப்பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனியப்பகுதிகளில்
கத்தோலிக்கத் திருச்சபையின் இருப்பு மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கம் கொண்டதாக
உள்ளன. திருப்பீடத்தின் சார்பில், நாடுகளுக்கிடையேயான திருப்பீட உறவுகளுக்கான துறையின்
நேரடிச்செயலர் பேரருட்திரு Ettore Balestrero தலைமையிலான குழுவும், PLOவின் சார்பில்
அரசுத்தலைவரின் கிறிஸ்தவ உறவுகளுக்கான ஆலோசகர் Ziad Al-Bandak தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகளில்
கலந்துகொண்டன.திருப்பீடத்திற்கும் PLO இயக்கத்திற்கும் இடையே சிறப்பு உறவை பலப்படுத்துவதாக
இப்பேச்சுவார்த்தைகள் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.