2010-12-04 15:27:03

டிசம்பர் 5, இந்தியாவில் தலித் விடுதலை ஞாயிறு


டிச.04, 2010. இந்தியாவில் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டு வரும் தலித் மக்களோடு தோழமையுணர்வு காட்டவும் அவர்களின் நீதிக்கானப் போராட்டத்தில் ஆதரவு வழங்கவும் எல்லாரையும் தூண்டும் நோக்கத்தில் இஞ்ஞாயிறைத் தலித் மக்களின் விடுதலை ஞாயிறாகக் கடைபிடிக்கிறனர் இந்திய கிறிஸ்தவர்கள்.

CBCI என்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும் NCCI என்ற இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவையும் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள இஞ்ஞாயிறு, “கடவுள் அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. .

இந்தத் தலைப்பு குறித்துக் கருத்து தெரிவித்த NCCI ன் பொதுச் செயலர் பாஸ்டர் ஆசீர் எபனேசர் இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூவும் மக்களின் அழுகுரலைக் கடவுளன்றி வேறு யார் கேட்க முடியும் என்பதையும் கடவுள் அநீதியைப் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பதையும் இத்தலைப்பு உறுதிப்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.

இஞ்ஞாயிறுக்கெனத் திருவழிபாடு ஒன்றையும் வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட ஆணைக்குழு, தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று அகிம்சா முறைகளில் போராடவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கானச் செயல்பாடுகளில் ஈடுபடவும் எல்லாருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் சுமார் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் கிறிஸ்தவர்களில் எழுபது விழுக்காட்டினர் தலித் பிண்ணனியைக் கொண்டவர்கள்.







All the contents on this site are copyrighted ©.