கருத்தாங்கல் தொடர்புடையவைகளில் தொழில்நுட்பத் தலையீட்டை எதிர்க்கிறது இந்திய தலத்திருச்சபை
நவ 30, 2010. கருத்தாங்கலில் தொழில்நுட்பத் தலையீட்டை குறித்த சட்டப்பரிந்துரை, ஒழுக்க
மற்றும் சமூகச்சீர்கேடுகளுக்கு வழிவகுப்பதாய் இருக்கும் என கவலையை வெளியிட்டுள்ளனர் இந்தியத்
தலத்திருச்சபை அதிகாரிகள்.
கருவளர்ச்சி மற்றும் குழந்தைப்பேறு தொடர்புடையவைகளில்
தொழில்நுட்ப ரீதியான தலையீடு சமூகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதனைத்
தலத்திருச்சபை வன்மையாக எதிர்ப்பதாக அறிவித்தார் பேராயர் ஜார்ஜ் வலியமட்டம்.
இந்திய
பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைப்பதற்கென இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்தால் தற்போது
தயாரிக்கப்பட்டுள்ள சட்டப் பரிந்துரை, குழந்தை பெற விரும்புவோர் கருமுட்டை மற்றும் விந்துவை
பிறரிடமிருந்து பெறுவதற்கு உதவுகிறது.
கருமுட்டை மற்றும் விந்து வங்கிகளை உருவாக்கவும்
ஆதரவு வழங்கும் இத்திட்டத்தைப்பற்றி குறைகூறிய திருச்சபை அதிகாரிகள், கருமுட்டைகள் மற்றும்
விந்துவை விற்பவர்களாகவும் வாங்குபவர்களாகவும் மக்களை மாற்றி, இதை ஒரு சந்தைப் பொருளாக
நடத்த உள்ள ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.