நவ.30, 2010. இன்றைய போர் மூலம் நாளைய அமைதியைக் கொணரமுடியாது என்பதை மனதிற்கொண்டதாய்
நம் அணுகுமுறைகள் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட
அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் துர்க்சன்.
ஜெர்மன் ஆயர் பேரவையின் நீதி மற்றும்
அமைதிக்கான அவையின் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் துர்க்சன், சின்னச் சின்ன பிரச்னைகள்
கூட இன்றைய நிலையில் உலக அளவிலான பெரும் பிரச்னைகளாக மாறும் ஆபத்து இருப்பதை நேரடியாகக்
காணமுடிகிறது என்றார்.
ஒவ்வொரு மனிதனும் உள்மனப் போராட்டத்தை அனுபவித்தாலும் போராட்டமே
வாழ்க்கை தத்துவமாக மாறிவிட முடியாது என்ற கர்தினால் துர்க்சன், போரும் அமைதியும் மனித
இதயத்திலேயே பிறக்கின்றது ஆனால் போரோ பாதிப்பையும், அமைதியோ அக்கறையையும் வெளிப்படுத்துகின்றது
என்றார். உலகின் முக்கிய மதங்கள் எல்லாம் ஐக்கியத்தையும் மக்களுக்கான அமைதியையும் குறிப்பவைகளாகவே
உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார் நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர்.