ஒட்டக ஓட்டுனர்களாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் பாகிஸ்தான் சிறார்களின் உரிமைகளுக்காக
காரித்தாஸ் அமைப்பு
நவ 29, 2010. பாகிஸ்தான் நாட்டில் சிறார்கள் பலர், ஒட்டக ஓட்டுனர்களாக வெளிநாடுகளுக்குக்
கடத்தப்படும் உரிமை மீறல் தொடர்ந்து இடம்பெறுவதால் அச்சிறார்களுக்கான பாதுகாப்புக்கு
அழைப்பு விடுத்துள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
மனிதர்கள்
தொழில் ரீதியாக வேறு நாடுகளுக்குக் கடத்தப்படுவது குறித்து பாகிஸ்தானில் ஆய்வு ஒன்றை
நடத்தியுள்ள அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி அமீர் இர்ஃபான், பாகிஸ்தானின் பஞ்சாப்
மற்றும் சிந்து மாகாணங்களில் ஏழ்மையின் காரணமாக குழந்தைகளும் பெண்களும் சுரண்டலுக்கு
உள்ளாக்கப்பட்டு குறைந்த ஊதிய தொழிலாளர்களாக கடத்தப்படும் அபாயம் உள்ளதாகக் கவலையை வெளியிட்டார்.
ஒட்டக
ஓட்டுனர்களாக அரபு ஐக்கிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் பாகிஸ்தான் சிறார்களின்
அடிப்படை உரிமைகள் மீறப்படுவதோடு, அவர்கள் பாலின ரீதியாகவும் தவறாக நடத்தப்படுவதாக பாகிஸ்தான்
கரித்தாஸ் அமைப்பு அறிவிக்கிறது.