பீகாரில் வெளியான தேர்தல் முடிவுகளுக்குத் தலத் திருச்சபையின் வரவேற்பு
நவ.25, 2010. பீகாரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசு குறித்து தங்கள் மகிழ்வைத்
தெரிவித்துள்ளனர் தலத் திருச்சபை அதிகாரிகள். இப்புதனன்று வெளியான முடிவுகளின்படி,
பீகார் மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் உருவான ஜனதா தள் கூட்டணி
பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட
மக்கள் முன்னேற்றத் திட்டங்களுக்கு மக்கள் நல்லதொரு முடிவைத் தந்திருக்கின்றனர் என்று
பாட்னா உயர்மறைமாவட்டப் பேராயர் William D 'Souza கூறினார். தங்கள் மாநிலத்தைப் பிளவுபடுத்திய
ஜாதி அரசியலை மக்கள் முற்றிலும் புறக்கணித்து, முன்னேற்றத்தை முன் வைத்த கட்சிகளை ஆதரித்தது,
பீகார் மாநிலத்திற்கு நல்லதொரு அடையாளம் என்று Buxar மறைமாவட்ட ஆயர் செபாஸ்டின் கல்லுப்புரா
கூறினார்.இந்தியாவில் மிகவும் பின்தங்கியப் பகுதி என்று அழைக்கப்படும் பீகார் மாநிலம்
கடந்த ஐந்து ஆண்டுகள் காட்டியுள்ள முன்னேற்றம் நிறைவான ஒன்று என்றும் அந்த முன்னேற்றத்தை
மேலும் வளர்க்க அரசு உழைக்கும் என்று தான் நம்புவதாகவும் ஆயர் கல்லுப்புரா மேலும் கூறினார்.